நெல்லையில் தாமிரபரணி ஆற்றின் ஜீவாதாரத்தை உறிஞ்சி தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் பெப்சி ஆலை துவங்கப்படுவதற்கு விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர், விவசாய தேவைக்குமான ஒரே ஆதாரமாக தாமிரபரணி நதி உள்ளது. இந்த ஆற்றை நம்பித்தான் ஆண்டுக்கு இரண்டு போகம் நெல்சாகுபடி மற்ற உணவு உற்பத்தியும் நடக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பொய்த்துவரும் மழையினால் தாமிரபரணி ஆற்றின் நீர் நிலையும் குறைந்து வருகிறது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் தேதியன்று கார் நெல் சாகுபடிக்கு ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் முடியும் தருவாயிலும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இரண்டு மாவட்டங்களிலும் நடக்கவேண்டிய ஒரு லட்சம் ஏக்கர் பரப்பிலான நெல் சாகுபடி செய்யமுடியாமல் விவசாயிகள் கண்ணீரும் கம்பலையுமாக தவிப்பில் உள்ளனர். இந்தசூழலில்தான் விவசாயிகளின் தலையில் இடி விழுந்தது போல ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில், சுமார் 36 ஏக்கர் நிலம் பெப்சி குளிர்பான நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
கங்கைகொண்டானில் ஏற்கனவே கோககோலா நிறுவனம் இங்கு துவக்கப்படும்போது பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.அதையும் மீறி நிறுவனம் துவக்கப்பட்டது. அந்த நிறுவனம் சுற்றுப்பட்ட கிராமங்களுக்கு செய்துதருவதாக உறுதியளித்த எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை.கேரள உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் பெப்சி நிறுவனத்தை துவக்க ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக தமிழகத்திற்குள் வந்தது. ஆரம்பத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நிலம் கேட்டார்கள். ஆனால் அங்கு தி.மு.க.,வின் எதிர்ப்பு காரணமாக அந்த திட்டத்தை கைவிட்டனர். தற்போது சத்தமில்லாமல் கங்கைகொண்டானில் 36 ஏக்கர் நிலத்தை வாங்கி பூமிபூஜை போட்டுள்ளனர். இந்த நிறுவனங்களுக்கு ஆயிரம் லிட்டர் தாமிரபரணி தண்ணீரை வெறும் 37 ரூபாய்க்கு வழங்குகின்றனர். அதாவது ஒரு லிட்டர் தண்ணீரை 37 பைசாவுக்கு வாங்கி, ஒரு லிட்டர் அக்வாபினா குடிநீர் பாட்டிலை 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஒரு ஏக்கர் நிலம் வெறும் ஏழு லட்சம் ரூபாய் வீதம் 36 ஏக்கர் நிலம் 95 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் பெரும்படையார் கூறுகையில், ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாயம் பொய்த்துவிட்டது. குடிநீருக்கு மக்கள் குடங்களை ஏந்தி அலைகிறார்கள். கோக் ஆலைக்குஅனுமதியளித்தபோல பெப்சியை துவக்க விடமாட்டோம். பெரிய அளவில் போராட்டங்கள் நடத்துவோம் என்றார்.மார்க்சிஸ்ட் கம்யூ.,(எம்.எல்.,) மாநில பொதுக்குழுஉறுப்பினர் வக்கீல் ரமேஷ் கூறுகையில், இந்த ஆலைக்கு அனுமதியளித்தது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் மழுப்புகிறார்கள்.அங்கு குளிர்பான ஆலை என்ற பெயரில் தண்ணீர் பாட்டில் ஆலையை துவக்க உள்ளார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம். மாநிலம் தழுவிய போராட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.
தமிழ்நாடு நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வக்கீல் பிரபாகரன் கூறுகையில், இந்த திட்டத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் நீர் ஆதாரம் வெகுவாக பாதிக்கப்படும். கோக், பெப்சி நிறுவனங்களுக்கு போகத்தான் தண்ணீர் மக்களுக்கு வழங்கப்படும் நிலை ஏற்படும். மேலும் கோக் நிறுவனம் தண்ணீருக்காக செலுத்தவேண்டிய குறைந்த கட்டணத்தை கூட செலுத்தாமல் மோசடி செய்துவருவது குறித்து புகார் அளித்துள்ளோம். எனவே கங்கைகொண்டானில் மக்களுக்கு வேலைவாய்ப்பு தரும் மற்ற தொழில்களுக்கு அனுமதியளிக்கலாமே தவிர இத்தகைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஆலைகளுக்கு அனுமதியளிக்க கூடாது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளோம் என்றார்.
நன்றி:தினமலர் செய்தி
நன்றி:தினமலர் செய்தி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக