திங்கள், 20 ஏப்ரல், 2015

தமிழகத்தில் பத்து குடும்பங்களுக்கு ஒருவர் வெளிநாட்டில்... குறிஞ்சிநெட்

தமிழ்நாட்டில்  ஐந்து சதவீத குடும்பங்களிலிருந்து ஒருவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது, தோரயமாக அதாவது 1.5கோடி தமிழ் குடும்பங்கள் இருப்பதாக கொண்டால் ஐந்து முதல் பத்துஇலட்சம் தமிழர்கள் வெளிநாட்டில் வேலை நிமித்தம் இருப்பதாககொள்வோம். ஆய்வு அறிக்கையின் மொத்த மதிப்பீடும் ஆண்டு இறுதியில் அறிக்கையாக வெளிவரும். அது சம்பந்தமாக பிபிசிதமிழ் பதிப்பில் வந்த கட்டுரையின் சாரம்சம் கீழே.

அதற்கு முன்பு கடந்த வருடம் வெளிநாட்டில் வேலை செய்வோர் ரிமிட்டன்ஸ் மூலம் தாய்நாட்டிற்க்கு அனுப்பும் பணத்தின் மதிப்பு ஒரு புள்ளிவிவரம். 2014ம் வருடத்தில் இந்தியாவினுள்ளே ரிமிட்டன்ஸ் மூலம் சுமார் 70$பில்லியன் பணம், அதாவது இந்திய மதிப்பில் தோரயமாக 4இலட்சம் கோடி வந்துள்ளது. 



இதே காலக்கட்டத்தில் நமது பாரதப்பிரதமர் தெருத்தெருவாய் மன்னிக்கவும் நாடுநாடாய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கரடியாய் கத்தி குட்டிக்கரணம் போட்டு வெளிநாட்டு தொழில் அதிபர்களுக்கு சலுகைகள் பல அறிவித்து வந்த பணம் சுமார் 36.4$பில்லியன், அதாவது 2லட்சம் கோடி (தோரயமாக). 

இது குறித்து ஏற்கனவே குறிஞ்சியில் வந்த கட்டுரைகளை படிக்க தவற விட்டிருந்தீர்கள் என்றால்...

பிபிசிதமிழில் வந்த கட்டுரை பின்வருமாறு:
நன்றி பிபிசிதமிழ்.
திருவனந்தபுரத்திலிருந்து இயங்கும் சென்டர் ஃபார் டெவலப்மெண்டல் ஸ்டடீஸ், லயோலா கல்லூரியின் சமூகவியல் பயிற்சி ஆய்வு மையம், ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இன்டர்நேஷனல் மைக்ரேஷன் ஃப்ரம் தமிழ்நாடு என்ற ஆய்வை மேற்கொண்டுள்ளன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முதற்கட்ட முடிவுகளின்படி, இப்படி வெளிநாடுகளில் வசிப்பவர்களின் மூலம் தமிழகத்திற்கு மட்டும் 2013ஆம் ஆண்டில் சுமார் 59,000 கோடி ரூபாய் அளவுக்கு பணம் அனுப்பட்டுள்ளது.

100 வீடுகளுக்கு 3 வீட்டில், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்கள் வசிக்கிறார்கள் என்கிறார் இந்த ஆய்வின் இயக்குனரான டாக்டர் இருதய ராஜன்.

இது ஆரம்பகட்ட கருத்துக் கணிப்பு என்பதால், தமிழகம் முழுவதும் 17 மாவட்டங்களில் சுமார் 9,300 குடும்பங்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் கிடைத்த விவரங்களே தற்போது அளிக்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக தமிழகத்திலிருந்து எவ்வளவு பேர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள் என்பது குறித்து யாரிடமும் தகவல் இல்லை என்கிறார் இருதய ராஜன்.

இந்தியாவிலிருந்து செல்பவர்கள் அதிக அளவில் சிங்கப்பூருக்குச் செல்வதாகவே இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 21 சதவீதம் பேர் அந்நாட்டில் வேலைபார்க்கின்றனர். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், கத்தார், பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகளுக்குத்தான் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் சென்றுள்ளனர்.

தமிழகத்திலிருந்து வெளியேறுபவர்களில் படித்தவர்களின் சதவீதம் அதிகம் இருப்பது கவலையளிக்கும் அம்சம் என்கிறார் இருதய ராஜன்.
சில தசாப்தங்களுக்கு முன்பாக, கேரளாவிலிருந்துதான் அதிகம் பேர் வெளிநாட்டில் வசித்த நிலையில், தற்போது அந்த இடத்தை உத்தரப்பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்கள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன.

இது தொடர்பான முழுமையான ஆய்வு முடிவுகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படுமென கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடு சென்று வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அப்போதுதான் தெரியவரும். இந்த ஆய்விற்கு தமிழக அரசு 24 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

கேரளா இதுவரை ஆறுமுறை இதுபோன்ற ஆய்வுகளை நடத்தியிருக்கிறது. குஜராத் இரண்டு முறையும் கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஒரு முறையும் இதுபோன்ற ஆய்வைச் செய்திருக்கின்றன.


இதுபோன்ற ஆய்வுகளைச் செய்வதன் மூலம் வெளிநாடு சென்று வேலை பார்த்து, பெரும் அளவில் அன்னியச் செலாவணியை ஈட்டிக்கொடுப்பவர்களுக்கு சில சலுகைகளை பெற்றுத்தர முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக